மார்ச், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2017

மகத்தான அழைப்பு

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55:1

சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்

வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).

நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.

அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்

ஜீவனும் மரணமும்

மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம, “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).

நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.

அக்கினி சோதனை

கடந்த குளிர்காலத்தில் கொலராடோவில் (Colorado) இருந்த ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த பொழுது, ஆஸ்பென் மரத்தை (காட்டரசுமரம்) பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகளை நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு விதைக்கு, மெல்லிய தண்டுடைய ஆஸ்பென் மரத்தோப்பை உருவாக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அனைத்து வேர்களும் அந்த ஒருவிதையிலிருந்து கிளம்பும். இந்த வேர் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலத்தடியில் மந்தமான நிலையில், எந்த ஒரு மரத்தையும் உற்பத்தி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்க முடியும். வெள்ளம், நெருப்பு அல்லது பனிச்சரிவின் வரவினால் காட்டில் ஏற்படும் வெற்றிடத்திற்காக அவை காத்துக்கொண்டிருக்கும். ஓர் இயற்கைப் பேரழிவினால் நிலம் அகற்றப் பட்டவுடன், மரத்தின் வேர்கள் சூரியனின் வெப்பத்தை உணர ஆரம்பிக்கும். பிறகு அவ்வேர்கள் கன்றுகளை அனுப்பத் தொடங்கும், அவை மரங்களாக வளர ஆரம்பிக்கும்.

பேரழிவின் மூலம் ஆஸ்பென் மரங்களின் வாழ்வில் ஓர் புதிய வளர்ச்சி சாத்தியமானதை நாம் காணலாம். கஷ்டங்கள் மத்தியில் நமது விசுவாசமும் இப்படித்தான் வளர்கின்றது என்று யாக்கோபு கூறுகின்றார். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4).

சோதனையைச் சந்திக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் தான். ஆனால் இப்படிப்பட்டதான கஷ்டமான சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தி, நம்மை முதிர்ந்த மற்றும் முழுமையான நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆஸ்பென் மரங்களைப்போல், சோதனைகளை சந்திக்கும் காலம், விசுவாசத்தில் நாம் வளரும் தருணமாக மாறலாம். பிரச்சனைகள் நம் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உண்டு பண்ணும்போது தேவனின் வெளிச்சம் நமக்குள் பிரவேசித்து நம்மை தொடும் தருணங்களாக மாறும்.

நல்ல கனியை கொடுப்பது

விமானத்தின் ஜன்னல் வழியாக நான் பார்த்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வறண்டு கிடந்த இரண்டு மலைகளுக்கு நடுவே ஓர் குறுகிய நாடா போன்று வளர்ந்திருந்த கோதுமை வயல்களையும், பழத்தோட்டங்களையும் கண்டேன். பள்ளதாக்கின் நடுவே ஓர் நதி ஓடியது. ஜீவனைத் தரும் நதியில்லாமல் எந்த கனியும் அங்கு உண்டாகியிருக்க முடியாது.

நிறைவான அறுவடைக்கு எப்படி சுத்தமான தண்ணீர் ஆதாரமாக இருக்கிறதோ, அதைப் போலவே என்னுடைய வாழ்வில் வெளிப்படும் என் வார்த்தை, செயல், மற்றும் அணுகுமுறை என்னும் “கனி”யின் தரமானது என்னுடைய ஆவிக்குரிய போஷாக்கினால்தான் உண்டாகுகிறது. சங்கீதக்காரன் சங்கீதம் 1ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனிதன்... நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருபவனாக இருப்பான்” என்று கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று ஆவியானவருடன் சேர்ந்து நடப்பவரை பற்றி பவுல் கலாத்தியர் 5ல் குறிப்பிட்டுள்ளார் (வச. 22-23).

சில நேரங்களில் நான் சூழ்நிலைகளைப் பார்க்கும் விதம் சரியில்லாமலிருக்கிறது அல்லது என் சொற்களிலும், செயல்களிலும் தொடர்ந்து அன்பற்ற தன்மையே வெளிப்படுகிறது. தேவனுடைய பிரசன்னத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தை செலவிட தவறியதால்தான், நான் நல்ல கனியைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எப்பொழுதெல்லாம் நான் தேவனைச் சார்ந்து, அவருக்குள் வேர் கொண்டு நிலைத்து நின்றேனோ, அப்பொழுதெல்லாம் நல்ல கனியை கொடுத்தேன். அப்பொழுது மற்றவர்களுடன் நான் பழகியபோது, பொறுமையும், இரக்கமும் என் குணாதிசயமாக வெளிப்பட்டது. மேலும் குறைகூறுவதை தவிர்த்து, நன்றியுள்ள நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது.

தம்மையே நம்மிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தேவனே நமது வலிமை, ஞானம், மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார் (சங். 119:28, 98, 111, 144, 165). அவருக்கு நேராக நம்மை நடத்தும் வார்த்தைக்குள் நமது ஆத்துமாவைப் புதைத்துக்கொண்டால், ஆவியானவர் நம் வாழ்வில் செய்யும் வேலை தெளிவாக வெளிப்படும்.

பிம்பத்தைக் கையாளுதல்

வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.

சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் - அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.

சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.

பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.

இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.